வரத்து அதிகரிப்பால் கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்களின் விலை குறைந்தது




வரத்து அதிகரிப்பால் கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்களின் விலை குறைந்தது. இதனால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனால் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும், நாட்டு படகுகள், பைபர் படகுகள், கட்டுமரங்கள் வாயிலாக மீன்பிடி தொழில் வழக்கம்போல் நடந்தது. அதனால் மீன் வரத்து குறைந்து, விலையும் உயர்ந்து காணப்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம், கடந்த 14-ந் தேதி நிறைவு பெற்றதையடுத்து, அன்று இரவு முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.

மீன்களின் விலை குறைந்தது

இதேபோல் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் இங்கு விற்பனைக்கு வருவதால் மீன் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்தும் சரக்கு வாகனங்களில் மீன்கள் விற்பனைக்கு வருகிறது.

வரத்து அதிகரிப்பால் மீன்களின் விலை சற்று குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தடை காலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன்கள் தற்போது விலை குறைந்து பழைய விலைக்கு விற்கப்படுகிறது. அதன்படி 700 கிராம் எடை கொண்ட ஒரு சிலுவை கெண்டை மீன் ரூ.300-லிருந்து ரூ.200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கூறு கொடுவா மீன் ரூ.450-லிருந்து ரூ.300-க்கும், புள்ள முரல் ஒரு மீன் ரூ.25-லிருந்து ரூ.15-க்கும், வெங்கனா பொடி மீன் ஒரு கூறு ரூ.200-லிருந்து ரூ.100-க்கும், இறால் ஒரு கிலோ ரூ.600-லிருந்து ரூ.400-க்கும் விற்பனையாகிறது. இதேபோல் மற்ற வகை மீன்களும் கணிசமாக விலை குறைந்துள்ளது. மீன் விலை குறைந்ததால் வெளியூர்களிலிருந்து மீன் வாங்க மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments