புதுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்



புதுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து போலீசார் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கனரக வாகனங்கள்

புதுக்கோட்டை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமை தாங்கி பேசினார். இந்த கூட்டத்தில் வர்த்தக சங்க அமைப்புகள், சரக்கு வாகன சங்க அமைப்புகள், கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன சங்க அமைப்புகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய மாற்றுப் போக்குவரத்து வழித்தடங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை மற்றும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மாநகர பகுதிகளுக்குள் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படும். மற்ற நேரங்களில் வரக்கூடிய சரக்கு வாகனங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் நேரடியாக சந்தைப்பேட்டைக்கு சென்று நிறுத்திக்கொள்ளலாம். மாநகர பகுதிக்குள் வர வேண்டிய வாகனங்கள் ஏதேனும் இருந்தால், அவை இரவு 10 மணி முதல் காலை 7 மணிக்குள் மட்டுமே வர வேண்டும். திருச்சி, விராலிமலை பகுதிகளில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி வழியாக செல்லும் கனரக வாகனங்கள் திருவப்பூர், கே.கே.சி. மாட்டுச்சிலை, பிச்சத்தான்பட்டி ரவுண்டானா, டி.வி.எஸ். கார்னர் ரவுண்டானா, மேட்டுப்பட்டி வழியாக செல்ல வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மாநகர பகுதிக்குள் வரக்கூடாது. திருமயத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நமணசமுத்திரம், மாலையீடு, டி.வி.எஸ். கார்னர், மேட்டுப்பட்டி வழியாக செல்ல வேண்டும். தஞ்சை, அண்டக்குளம் பகுதிகளில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் வாகனங்கள் இச்சடி, வடவாளம், காயம்பட்டி, திருவரங்குளம், பூவரசக்குடி வழியாக செல்ல வேண்டும்.

நகர்ப்புற பஸ்களுக்கான வழித்தடங்கள்

அண்ணாசிலையில் இருந்து பிருந்தாவனம் நோக்கி கீழராஜவீதி வழியாக இலகுரக வாகனங்கள் செல்லலாம். ஆனால் மறுமார்க்கத்தில் கீழராஜவீதி வழியாக இலகுரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மச்சவாடியில் இருந்து அண்ணாசிலை வழியாக இலகுரக வாகனங்கள் பிருந்தாவனம், கீழ் 2-ம் வீதி வழியாக அண்ணாசிலை வர வேண்டும். அண்ணாசிலையில் இருந்து பி.எல்.ஏ. ரவுண்டானா வழியாக தெற்கு 4-ம் வீதி வழியாக செல்லக்கூடாது. மாறாக பி.எல்.ஏ. ரவுண்டானாவில் இருந்து அண்ணாசிலை வந்தடையலாம்.

மச்சவாடியில் இருந்து வரும் பஸ்கள் பிருந்தாவனம், பழனியப்பா கார்னர், ஜி.எச். நால்ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தை சென்றடைய வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் இருந்து அண்டக்குளம், தஞ்சை பஸ்கள் கே.கே.சி. மாட்டுச்சிலை, பால்பண்ணை, பழனியப்பா கார்னர், பிருந்தாவனம், மச்சுவாடி வழியாகச் செல்ல வேண்டும். அறந்தாங்கி, ஆலங்குடி, மேட்டுப்பட்டி பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பேரங்குளம், என்.ஜி.ஓ. காலனி பஸ் நிறுத்தம், எம்.ஜி.ஆர். சிலை வழியாகப் புதிய பஸ் நிலையம் வர வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments