பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு: திரவ பொருட்களை சேமிக்கும் குடுவை, ஓடுகள் கண்டெடுப்பு!



பொற்பனைக்கோட்டை அகழாய்வில் அயலக தொடர்பை வெளிப்படுத்தும் திரவ பொருட்களை சேமிக்கும் குடுவையின் அடிப்பாகம் மற்றும் பிணைப்பு முகட்டு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் கடந்த வாரம் முதற்கட்ட அகழாய்வுப்பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் தொடர் மேற்பரப்பாய்வில் ஈடுபட்ட புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் கோட்டையின் வடக்கு வாயிலின் மேற்பரப்பில் செங்கல் சிதிலங்களுக்கு இடையே கோட்டையின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட சுடுமண் பிணைப்பு முகட்டு ஓட்டினை கண்டெடுத்துள்ளனர். 

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:-

பொற்பனைக்கோட்டையின் நான்கு புறவாயில்கள், வழிபாட்டு ஆலயங்கள், உயர்ந்த கோட்டைச்சுவர், கொத்தளத்தின் வடிவம், புற, அகக்கோட்டைகள் அக, புறஅகழிகள், அகக்கோட்டையின் மையத்தின் மேற்புறமாக அரண்மனைமேடு, கிழக்குப்புறமாக வாவிகுளம் என ஒட்டுமொத்த கட்டுமான அமைப்பும் தமிழகத்தின் வேறெங்கும் காண இயலாதவாறு சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அதே வடிவமைப்புடன் காணப்படுகிறது.

பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் மேலாய்வு மேற்கொண்டபோது ஆம்போரா குடுவையை ஒத்த சுடுமண் குடுவையின் அடிப்பாகத்தை கண்டறிந்து தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் அகழாய்வு இயக்குனர் முனைவர் இனியனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ரோம், ஸ்பெயின், இத்தாலி நாடுகளிலிருந்து ஆலிவ் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட திரவப்பொருட்கள் சிறப்பு வடிவிலான ஆம்போர குடுவைகளில் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வணிகம் செய்யப்பட்டு உள்ளதற்கான ஏராளமான சான்றுகள் உலகம் முழுவதும் கிடைத்துள்ளன. 

இந்தியாவில் குஜராத்தில் துவாரகா, கேரளாவில் பட்டிணம், புதுச்சேரியில் அரிக்கமேடு, ஆந்திராவில் சந்தரவல்லி, தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் புகளூரிலும், ஆத்தூரிலும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் இக்குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் டூர்நுஸ், குஜராத்தில் துவாரகா, புதுச்சேரியில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த ஆம்போரா குடுவைகளின் அடிப்புற அமைப்பை போன்றே பொற்பனைக்கோட்டையிலும் சுடுமண் குடுவையின் அடிப்பரப்பும் உள்ளது. 

இருப்பினும் குடுவையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட களிமண் வகையை பொறுத்தே வெளிநாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டதா? என உறுதி செய்ய இயலும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் செல்வக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது உள்நாட்டு களிமண்ணில் தயாரிக்கப்பட்டு திரவப்பொருட்களை சேமிக்கும் குடுவையாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

நான்கு வாயிற்பகுதிகளிலும் பாதுகாப்பு அறைகள் இருந்ததற்கான செங்கல் கட்டுமானங்களின் அடிப்பகுதியை காணமுடிகிறது. கோட்டையின் மேற்புற பகுதியில் எமது குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்கூரை ஓடுகள், ஆதிச்சநல்லூரில் 2020-ம் ஆண்டு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதே வடிவத்துடனும் நீர்வடிவதற்கான வரிப்பள்ளம், ஆணிக்குமிழ் பொருத்துவதற்கான துளை உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் காணப்படுகிறது. 

தமிழகத்தில் ஆதிச்சநல்லூரிலும், கீழடியிலும் கண்டெடுக்கப்பட்ட கூரைஓடுகளின் வடிவமைப்பையொத்த கூரைஓடுகள் பொற்பனைக்கோட்டையிலும் காணப்படுவது சங்ககால கட்டுமான தொழில்நுட்ப தொடர்பில் ஒருமித்திருந்ததை உணர்த்துகிறது.

பழமையான ரோமாபுரி கட்டுமானங்களில் தெக்குலா எனப்படும் சுடுமண் ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓடுகளின் பக்கவாட்டு பிணைப்பு பகுதியில் நீள் வாக்கிலமைந்த இம்ரெக்ஸ் என அழைக்கப்படும் சிறிய முகட்டு ஓடு பயன்படுத்தப்பட்டு உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் ஸ்கிப்டன் நகரிலுள்ள கிரவென் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். அதே அமைப்பிலான சுடுமண் இணைப்பு ஓட்டினை பொற்பனைக்கோட்டையின் வடக்கு புற வாயிற் மேட்டில் கண்டுபிடித்துள்ளோம்.

பொற்பனைக்கோட்டையில் வசித்த மக்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தரவுகள் கிடைத்துக்கொண்டே உள்ளன. முழுமையான விரிவான தொடர் அகழ்வாய்வுகளை பொற்பனைக்கோட்டை அரண்மனை மேட்டு பகுதியில் மேற்கொள்ளும்போது சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அரண் மற்றும் கோட்டை குறித்து அனைத்து கருத்துகளுக்கும் வலுசேர்க்கும் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுசார்ந்து தொடராய்வுகளை தமிழக அரசும் தமிழ்நாடு தொல்லியல் துறையும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments