கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி)! ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை!!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது.

கடற்கரை ஈத்கா மைதானம்-தோப்பு சாலையில் உள்ள (ஈத்கா மைதானம் முதல் தோப்பு வளைவு வரை) சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எரியவில்லை. கடற்கரை-தோப்பு சாலையில் கலர் கம்பெனி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
மேலும் பெரியவர்கள், சிறியவர்கள் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் அரண்மனை தோப்பில் உள்ள ஊற்றில் குடிதண்ணீர் எடுத்து செல்பவர்கள், அப்பகுதி வழியாக மீமிசல் சென்று வரக்கூடிய பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பலர் கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கோபாலப்பட்டிணத்தில் இது போன்று பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாததால் இருளில் நடக்க மக்கள் பயப்படுகிறார்கள். மேலும் மழை காலம் என்பதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் தெருவில் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோபாலப்பட்டிணம் கடற்கரை ஈத்கா மைதானம்-தோப்பு சாலையில் எரியாத தெருவிளக்குகளை உடனடியாக பழுது பார்த்து புதுப்பிக்கும்படி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், தெருவிளக்குகள் எரிய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments