படியில் பயணம் நொடியில் மரணம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து




மேல்மருவத்தூர் அருகே லாரி மீது பஸ் உரசியதில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள்.

கல்லூரி மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கமலேஷ் (வயது 22). பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் மோனிஷ் (21). இவர் பி.பி.ஏ. படித்து வந்தார். கொவளை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் தனுஷ் (23). பி.எஸ்.சி. படித்து வந்தார்.

மோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ரவிச்சந்திரன் (20). இவர்கள் அனைவரும் மதுராந்தகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தனர்.

படிக்கட்டில் நின்றபடி பயணம்

இவர்கள் தினமும் தனியார் பஸ் மூலமாக கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை கல்லூரி செல்வதற்காக திண்டிவனத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினர். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி அவர்கள் பயணம் செய்தனர். அந்த பஸ் மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது உரசியது.

சாவு

இதில் கமலேஷ், சிவகுமார், மோனிஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments