புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்களை மானியத்துடன் அமைக்க விண்ணப்பிக்கலாம்



தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிகழ்வாண்டில் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் அரசு மானிய உதவியுடன் அமைக்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் சுமார் 400 சதுர அடி முதல் 1,000 சதுர அடி வரை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. சிறு, குறு விவசாய பெண்கள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 60 சதவீதம் அல்லது ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அதிகபட்ச மானியம், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சம் அதிகபட்ச மானியம் வழங்கப்படுகிறது.

பதிவு செய்து பயன்பெறலாம்

வேளாண் விளை பொருட்களை உலர்த்தி அதனை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றி, கூடுதல் வருமானம் பெறும் வகையில், சூரிய மின்சக்தி உலர்ப்பான்கள் அமைக்க விரும்பும் விவசாயிகள், விவசாயிகள் விளைபொருள் குழுக்கள், சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் பதிவு செய்து பயனடையலாம்.

புதுக்கோட்டை, விராலிமலை, அன்னவாசல், குன்னண்டார்கோவில், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் இயங்கும் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்திலும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர், அலுவலகத்தில் பதிவு செய்து சூரிய மின் சக்தி உலர்ப்பான்கள் அமைத்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments