புயலைக் கிளப்பும் கொரோனா வைரஸ் விவகாரம்: வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா.!



கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சீன அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட்டு உள்ளது.


கொரோனா வைரஸ் முதன் முதலாக, நம் அண்டை நாடான சீனாவில் தான் உருவானது. பின், மற்ற நாடுகளுக்கு பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா வைரஸ் பற்றிய விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்காமல், சீனா மறைத்து விட்டதாகவும், அதனால் தான், இந்த நோயால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி விட்டதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கசிந்ததாகவும் அமெரிக்கா புகார் கூறியது. 

இந்த விஷயத்தில், உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அமெரிக்கா அதிருப்தி அடைந்தது. சுகாதார நிறுவனத்துடனான தொடர்பை துண்டிப்பதாக அறிவித்த அமெரிக்கா, அதற்கு அளித்து வந்த நிதி உதவியையும் நிறுத்தியது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் தொடர்பான வெள்ளை அறிக்கையை, சீன தகவல் தொடர்புத் துறை உதவி தலைவர் சூ லின், நேற்று வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வூஹான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சில நோயாளிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருப்பதாகவும், இது, வழக்கமான சளி, காய்ச்சலில் இருந்து வித்தியாசமாக இருப்பதாகவும், கடந்தாண்டு, டிச., 27ல், அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ நிபுணர்கள் அங்கு விரைந்தனர். நோயாளிகளை பரிசோதித்ததில், அவர்களுக்கு ஒரு வகையான வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அடுத்த சில நாட்களில், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்தது. இதையடுத்து, தொடர்ச்சியாக ஆய்வுகளும், பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதில், இந்த வைரஸ், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்பதை உறுதி செய்வதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

மேலும், வூஹான் நகரில் உள்ள இறைச்சிக் கூடத்திலிருந்து பரவியதாக கூறப்படுவதை நிரூபிக்கவும் போதிய ஆதாரங்கள் இல்லை. வவ்வால் மூலமாக பரவியதாக கூறப்படுவதையும் ஆதாரங்களுடன் உறுதி செய்ய முடியவில்லை.ஆனாலும் இது, அபாயகரமான வைரஸ் என்பது, ஜன., 14ல் தெரிய வந்தது.

இதையடுத்து, வூஹான் நகரிலும், ஹூபே மாகாணத்திலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில், இந்த வைரஸ், மனிதர்களிடமிருந்து சக மனிதர்களுக்கு பரவுவதை, ஜன., 19-ல், சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர். சீனா முழுதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

உடனடியாக, உலக சுகாதார நிறுவனத்துக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.ஆனாலும், ஜன., 3ம் தேதியிலிருந்தே, உலக சுகாதார நிறுவனத்துக்கும், அமெரிக்காவுக்கும் இந்த வைரஸ் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரிமாறப்பட்டு வந்தன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments