குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி: ஆர். புதுப்பட்டினத்தில் புதிய சாலை அமைக்க அமைச்சர் முகமது பர்வேஸிற்கு கோரிக்கை!




ஆவுடையார் கோவில் தாலுகாவிற்குட்பட்ட ஆர்.புதுப்பட்டிணம் பகுதியில் உள்ள பிரதான தார் சாலை, பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்புமின்றி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் இந்தச் சாலை, தற்போது முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுவதால், இப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
புறக்கணிக்கப்பட்ட கோரிக்கைகள்
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இச்சாலை சீரமைப்பு குறித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.இராமச்சந்திரனிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டன. "அடுத்த முறை கண்டிப்பாகப் புதிய சாலை அமைத்துத் தரப்படும்" என அவர் தொடர்ந்து வாக்குறுதி அளித்து வந்த போதிலும், அவரது பதவிக்காலம் முழுவதும் இச்சாலை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே கைவிடப்பட்டதாகப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 
அமைச்சருக்கு அவசரக் கோரிக்கை
தற்போது இப்பகுதியின் தேவைகளை நன்கு அறிந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மு.ப.முகமது பர்வேஸ் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
குறிப்பாக, ஆர். புதுப்பட்டிணம் முஸ்லிம் குடியிருப்பு மற்றும் மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் அன்றாடப் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ஆபத்தான தார் சாலையை அகற்றிவிட்டு, போர்க்கால அடிப்படையில் புதிய தார் சாலை அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
ஆர். புதுப்பட்டிணம் பகுதியின் பிரதான போக்குவரத்து நரம்பாக இருக்கும் இச்சாலை, சேதமடைந்துள்ளதால் பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். புதிய அரசு மற்றும் உள்ளூர் அமைச்சர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.










 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments