மணமேல்குடி அருகே மணலூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 10 வயது சிறுமி உயிரிழப்பு...



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை அடுத்த மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் உடையப்பன். விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு சத்யஸ்ரீ(வயது 10), சுசீலா(7) என 2 மகள்கள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

தற்போது கொரோனா விடுமுறை காரணமாக வீ்ட்டில் இருந்து வந்தனர். கடந்த 4 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. உடையப்பன் வீட்டு மண்சுவரும் மழையில் நனைந்து ஈரமாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டு சுவற்றின் ஓரமாக சத்யஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது மண் சுவர் திடீரென இடிந்து சத்யஸ்ரீ மீது விழுந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் பார்வையிட்டு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments