தென்னை விவசாயிகளின் நலனுக்காக கொப்பரைத்தேங்காய் கொள்முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிப்பு! தமிழக அரசு தகவல்!!



தென்னை விவசாயிகளின் நலனுக்காக கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்காக மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், விலை ஆதரவு திட்டத்தின்கீழ் பந்து கொப்பரை, அரவை கொப்பரைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, நாமக்கல், தர்மபுரி, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற 21 மாவட்டங்களில் 12 ஆயிரத்து 300 தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக 14 ஆயிரத்து 800 டன் கொப்பரைத்தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் 6 மாதங்களுக்கு மட்டுமே கொள்முதல் மேற்கொள்ளப்பட்டதால், ஜூலை 31-ந் தேதிக்கு பின் வெளிமார்க்கெட்டில் கொப்பரைத்தேங்காயின் விலை கணிசமாக குறைந்தது. தமிழக தென்னை விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கொப்பரைத்தேங்காய் கொள்முதலுக்கான கால அளவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்தது. அதை ஏற்று, மத்திய அரசு கொப்பரைத்தேங்காய் கொள்முதலை வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டித்து ஆணை வழங்கியுள்ளது. உடனடியாக, மேற்காணும் 21 மாவட்டங்களில் உள்ள 46 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரைத்தேங்காயை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதலை தொடர்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து, அரசு நிர்ணயித்துள்ள தரத்துக்கேற்ப நன்கு உலரவைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம்பிரித்து கொள்முதலுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, பந்து கொப்பரைத்தேங்காய் கிலோவுக்கு ரூ.110-க்கும், அரவை கொப்பரைத்தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90-க்கும் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைத்தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் செலுத்தப்படும். தற்போது வெளிச்சந்தையில் கொப்பரைத்தேங்காய்க்கும், தேங்காய்க்குமான விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகள் அனைவரும் கொப்பரைத்தேங்காய் கொள்முதல் திட்டத்தில் இணைந்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments