‘வாழ்வாதாரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ பொதுமக்களின் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்க வேண்டாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை




‘பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும் என்று சேலத்தில் 2-வது நாளாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

2-வது நாளாக ஆய்வுக்கூட்டம்

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் உள்பட 4 மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வுக்கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

ஓர் அரசு ஏன் இயங்குகிறது? அரசு அதிகாரிகளின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சட்டங்களும், திட்டங்களும் எதற்காக வகுக்கப்படுகின்றன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கும்போது நமக்கு கிடைக்கும் ஒரே பதில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் என்பது மட்டுமே. இங்கு அனைவரும் அமர்ந்து நேரத்தை செலவழித்து ஆய்வு செய்வது, மக்களுக்கான நமது பொறுப்பை, கடமையை சரியாக செய்கிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவும். தொய்வாக உள்ள பணிகளை சரி செய்து சீர்திருத்திக் கொள்ளவும் தான்.

காகிதங்களாக பார்க்காமல்...

மக்கள் தங்களது குறைகளையும், தேவைகளையும் இந்த அரசு தீர்த்து விடும் என்ற நம்பிக்கையில் அவற்றையெல்லாம் மனுக்களாக நம்மிடத்தில் வழங்குகிறார்கள். அவற்றை நாம் வெறும் காகிதங்களாக பார்க்க வேண்டாம். ஒருவரின் வாழ்வாதாரமாக, எதிர்காலமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தான் இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி ‘முதல்வரின் முகவரி’ என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களாட்சி தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்த அரசு, அவர்களின் குறைகளை தீர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பட்டா மாறுதல் தாமதமின்றி, எந்த அலைக்கழிப்பும் இன்றி நடைபெறுவதை மாவட்ட கலெக்டர்களும், மாவட்ட வருவாய் அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

பெரிய திட்டங்களை மக்களுக்காக அரசு நிறைவேற்றி வரும் வேளையில், மக்களுக்கு தேவையான இதுபோன்ற அடிப்படையான அரசு சேவைகள் வழங்கப்படுவதில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தராது. ஆகவே, அதில் கவனமாகப் பணியாற்றுங்கள்.

சார்நிலை அலுவலர்களை ஆய்வு செய்யுங்கள். தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணியுங்கள்.

வேளாண் உற்பத்தி

அடுத்து முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது வேளாண் உற்பத்தி. மதிப்புகூட்டல் மற்றும் உழவர் உற்பத்தி குழுக்கள் பற்றியதாகும். நேற்றைய தினம் நான் இந்த 4 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு துறை பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினேன். அப்போது, விவசாயிகள், சிறுதானிய உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புகூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்தனர். அவற்றை அரசு வேளாண்மை துறை செயலாளரும், மாவட்ட அளவில் கலெக்டரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

முன்னுரிமை

விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள்.

எனவே, அடிப்படை பணிகளில் குறிப்பாக குப்பைகளை விரைந்து அகற்றுதல், கழிவு நீர் தேங்காமல் தூர் வாருதல், பழுதான சாலைகளை சீர் செய்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோல், கல்வி, சுகாதாரம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்டு வரக்கூடிய திட்டங்களை கவனமாக ஆய்வு செய்து, உங்கள் மாவட்ட மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும்.

சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திட வேண்டும். அதோடு மட்டுமின்றி குறைகள் களையப்பட்டதையும் பதில் செய்தியாக அதே ஊடகத்திற்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

மக்கள் நலன் கருதியே..

நான் ஏற்கனவே கூறியபடி மக்கள் நலன் கருதியே அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை காலத்தே செய்யுங்கள். செய்தும் வருகிறீர்கள். இன்னும் சிறப்பாக பணியாற்றுங்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை திரும்பினார்

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், ஆர். காந்தி, மதிவேந்தன், தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக ஆய்வுக்கூட்டத்தை நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணியளவில் காரில் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு புறப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து தனிவிமானம் மூலம் சென்னை திரும்பினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments