சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்- அக்டோபர் மாதம் முதல் சூப்பர் பாஸ்ட் ரெயிலாகிறது





செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருநெல்வேலி நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் சூப்பர்பாஸ்ட் ரெயிலாகிறது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.16824) கொல்லத்தில் இருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16823) சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 3.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.

இதற்கிடையே, நாகர்கோவில்-நெல்லை இடையே ஒரு பகுதியும், நெல்லை-சென்னை இடையேயும் இரட்டை அகலப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் நெல்லை-நாகர்கோவில் இடையே அதிகரிக்கப்பட்டது.

சூப்பர் பாஸ்ட் ரெயில்

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் சூப்பர்பாஸ்ட் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயிலின் நேர அட்டவணை முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1-ந் தேதி முதல் கொல்லத்தில் இருந்து இந்த ரெயில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5.24 மணிக்கு நாகர்கோவில் டவுனுக்கும், இரவு 7 மணிக்கு நெல்லைக்கும், இரவு 8.50 மணிக்கு விருதுநகருக்கும், இரவு 9.10 மணிக்கு திருமங்கலத்துக்கும், இரவு 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்துக்கும் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 6.05 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 3.20 மணிக்கு மதுரைக்கும், நள்ளிரவு 3.44 மணிக்கு திருமங்கலத்துக்கும், 4.10 மணிக்கு விருதுநகருக்கும், காலை 6.05 மணிக்கு நெல்லைக்கும், காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கும் வந்தடைகிறது. நண்பகல் 11.15 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் சூப்பர்பாஸ்ட் ரெயிலாக மாற்றம் செய்யப்படுவதால் ரெயிலின் எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லம்-சென்னை ரெயில் வண்டி எண் 16824-க்கு பதிலாக வண்டி எண் 20636 ஆகவும், சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 16823-க்கு பதிலாக வண்டி எண் 20635 எனவும் மாற்றப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments