வரைவுப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன் தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம் தமிழகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களை விட பெண்களே அதிகம் ஆவர்.




நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல்

அதேவேளையில் 1.1.2024-ஐ தகுதி நாளாக கொண்டு நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியையும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

தமிழகத்தில் இந்தப்பணி முடிவடைந்த நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

6.11 கோடி வாக்காளர்கள்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண்கள் 3 கோடியே 68 ஆயிரத்து 610 பேர் ஆவர். பெண்கள் 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேரும் அடங்குவர்.

ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இரட்டை பதிவு, இறப்பு போன்ற காரணங்களினால் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 94 ஆயிரத்து 985 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளிக்கலாம்.

நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இருப்பிட சான்று மற்றும் வயது சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பிட சான்றாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.

69 சதவீதம் பேர் ஆதார் இணைப்பு

17 வயது நிறைவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இப்போதே விண்ணப்பம் அளிக்கலாம். எந்த தேதியில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைகிறதோ அப்போது அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 23 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைத்துள்ளனர். இது, 69.21 சதவீதம் ஆகும்.

வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 2 இடங்களில் இருந்தால் தானாகவே காண்பிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி உள்ளது. அவ்வாறு ஒரு வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இருக்கும்போது வாக்குச்சாவடி அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு கடிதம் அனுப்பி அவர் எந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என விரும்புகிறாரோ அந்த அடிப்படையில் அவரது பெயர் சேர்க்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments