வரைவு பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 798 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெர்சி ரம்யா தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர் கலெக்டர் மெர்சி ரம்யா கூறியதாவது:-

2024-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 559 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 64 ஆயிரத்து 175 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 64 ேபர் என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள்

2023-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (05.01.2023-ன் படி) மொத்தம் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தொடர் திருத்தத்தின்போது 4 ஆயிரத்து 392 ஆண் வாக்காளர்கள், 5 ஆயிரத்து 371 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 3 ேபர் என மொத்தம் 9 ஆயிரத்து 766 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 15 ஆயிரத்து 488 ஆண் வாக்காளர்கள், 20 ஆயிரத்து 502 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 ேபர் என மொத்தம் 35 ஆயிரத்து 995 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 83 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 864 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

சிறப்பு முகாம்

இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் பெறுவதற்கு ஆணையத்தால் வகுக்கப்பட்ட காலத்தில் ஜனவரி 1-ம் நாள், ஏப்ரல் 1-ம் நாள், ஜுலை 1-ம் நாள் மற்றும் அக்டோபர் 1-ம் நாட்களில் 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான வாக்காளர்களிடமிருந்து முன்னதாகவே படிவங்களை பூர்த்தி செய்து பெறலாம். இந்த படிவங்கள் சம்பந்தப்பட்ட நபரின் பிறந்த நாளினை வைத்து தகுதியேற்படுத்தும் நாட்கள் அடிப்படையில் அந்தந்த காலாண்டில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும்.

வாக்காளர்களின் வசதிக்கேற்ப வருகிற 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும். 2024-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 616 பேர் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சியினர்

இந்தநிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், ஆர்.டி.ஓ.க்கள் சிவக்குமார் (அறந்தாங்கி), பெரியநாயகி (இலுப்பூர்), தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தரப்பில் இருந்து யாரும் பங்கேற்காததால் சற்று சலசலப்பானது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments