பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்




பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், எதிர்வரும் கோடை காலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார வினியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.

மாநிலத்தின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத உச்சபட்ச மின் தேவை முறையே 17 ஆயிரத்து 35 மெகாவாட் மற்றும் 17 ஆயிரத்து 690 மெகாவாட் எட்டிய நிலையில், இந்த உச்சபட்ச மின் தேவையானது எவ்வித மின் தடையுமின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மின் தேவையுடன் இதனை ஒப்பிடும் போது, முறையே இது சுமார் 11.1 சதவீதம் மற்றும் 9 சதவீதம் கூடுதலாகும்.

மின் நிறுத்தம் வேண்டாம்

இதே போன்று, மார்ச் மற்றும் ஏப்ரல் மாத உச்சபட்ச மின் தேவை முறையே 18 ஆயிரம் மெகாவாட் மற்றும் 19 ஆயிரத்து 900 மெகாவாட் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் தேவையினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி மூலம் 13 ஆயிரத்து 999 மெகாவாட் மற்றும் 15 ஆயிரத்து 93 மெகாவாட் பூர்த்தி செய்யப்படுகிறது.

மீதமுள்ள மின் தேவையை மார்ச் மாதம் 3 ஆயிரத்து 571 மெகாவாட் மற்றும் ஏப்ரல் 4 ஆயிரத்து 321 மெகாவாட் மின்சாரத்தினை வெளி மின்சந்தை, மின் பரிமாளற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், நம் மாநிலத்தின் கோடைக்கால மின் தேவையை முழுமையாக எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும்.

தமிழ்நாட்டில், பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

தடையில்லா மின்சாரம்

மேலும், முதல்-அமைச்சரின் ஆணைப்படி, நம் மாநிலத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தின் மொத்த தேவையினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments