குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பதிவுக்கு கால அவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு




குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பதிவுக்கு கால அவகாசம் வருகிற டிசம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு சான்றிதழ்

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறப்பு 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புசான்றிதழ் ஆகும்.

பெயர் இல்லா பிறப்பு சான்றிதழினால் அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த பயனும் இல்லை. பிறப்பு சான்றிதழ், குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம் மற்றும் வயது குறித்த முடிவான ஆதாரமாகவும் விளங்குகிறது.

தாமத கட்டணம்

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப்பின் 15 வருடங்களுக்குள் ரூ.200- தாமதக்கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம்.

15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரினைப் பதிவு செய்திட இயலாது. குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (01.01.2020 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்ற கால அவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட வாய்ப்புகள் இல்லை.

டிசம்பர் மாதம் கடைசி

கால அவகாச நீட்டிப்பு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. 01.01.2000 -க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தையின் பெயர் வைத்து பிறப்புச் சான்றிதழ் பெற வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகும்.

எனவே 31.12.2024 -க்குள், பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, தாலுகா மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு, அப்பகுதிகளில் உள்ள தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, குழந்தையின் பெயர் பிறப்பு பதிவேற்றம் பதிவு செய்யவும், பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று, குழந்தையின் எதிர் கால நல்வாழ்விற்கு உதவிடும்படி அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments