கருப்பூர் கிராமத்தில் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட கருப்பூர் கிராமத்தில், சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடுமையான தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள கருப்பூர் கிராமத்தின் நாடார் குடியிருப்பு பகுதியில், பிரதான சாலையின் ஓரமாக மழைநீர் மற்றும் உபரி நீர் செல்வதற்காக வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஒரு சில தனிநபர்கள் தங்களது வீட்டு உபயோகக் கழிவுநீர் மற்றும் சாக்கடை நீரை இந்த பொது வடிகால் வாய்க்காலில் நேரடியாக திறந்து விடுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது கோடை வறட்சி நிலவி வருவதாலும், மழை இல்லாததாலும் வாய்க்காலில் நீர் வரத்து இன்றி, இந்த வீடுகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி வருகின்றன.

ஏற்கனவே இந்த அசுத்தமான சூழலால் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வறட்சி காலத்திலேயே இந்த நிலை நீடித்தால், வரும் நாட்களில் தொற்று நோய் பாதிப்பு இன்னும் தீவிரமடையக்கூடும் என்று சமூக ஆர்வலர்களும், அச்சாலையை நாள்தோறும் பயன்படுத்தும் பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட சுகாதாரத் துறையினரும் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும், தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: மாரிமுத்து, அறந்தாங்கி

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments