மணமேல்குடி அருகே 6 குறுவள மையங்களில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள்: வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்பு!



மணமேல்குடி ஒன்றியத்தில் குறுவள மைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் 6 மையங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்பலவாணனேந்தல் ஆகிய 6 குறுவள மையங்களில் இப்போட்டிகள் தொடங்கப்பட்டன. அந்தந்த மையங்களின் தலைமை ஆசிரியர்கள் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் குறுவள மையங்களுக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வண்ணம் தீட்டுதல், மாறுவேடப் போட்டி, பேச்ச்ப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தேசபக்திப் பாடல், தனிப்பாடல், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் குறுவள மைய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள், அடுத்து நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார கல்வி அலுவலர்கள் செழியன், அமுதா, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர் செல்வன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments