'புதிய கோட்டை' சமஸ்தானம் புதுகோட்டை மாவட்டமாக மாறியது இன்றுதான்!



புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று பிறந்தநாள். பல்வேறு பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட புதுக்கோட்டை, தனி மாவட்டமாக உருவானது இன்றைய தினத்தில்தான்.


இன்றைய தேதியிலிருந்து சரியாக 45வருடங்களுக்கு முன்பு, அதாவது,14.01.1974-ம் வருடம் தமிழ்நாட்டின் பதினைந்தாவது மாவட்டமாக உதயமானது. ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளியின் வருவாய் கோட்டமாக மட்டுமே இருந்து வந்த புதுக்கோட்டையை, நிர்வாக வசதிக்காக தனி மாவட்டமாக பிரித்தவர் அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி.

நாற்பத்து ஐந்து வயது முடிந்து, நாற்பத்து ஆறாவது வயதில் அடியெடுத்து வைக்கும் புதுக்கோட்டை மாவட்டம்  பல்வேறு தனித்துவமான அடையாளங்களை கொண்டது. சித்தன்னவாசல் சமணர் படுக்கைகள், குடைவரைக் கோயில்கள், திருமயம் கருங்கல் கோட்டை,குடுமியான்மலை, விராலிமலை என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.  தொண்டைமான் ஆளுகைக்குட்பட்ட பெரும் சமஸ்தானமாக இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி.1686) தொண்டைமான் பேரரசர்கள் தங்களுக்கென்று புதிய நகரை நிர்மாணித்து, அதற்கு  'புதிய கோட்டை'என்று பெயரிட்டார்கள். காலப்போக்கில் அது புதுக்கோட்டை என்று மருவி விட்டது

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாகவே இருந்து வந்த புதுக்கோட்டையை, அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவுடன் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் பிரகதாம்பாள் தாஸ்  இராஜகோபால தொண்டைமான் தேசிய உணர்வுடன் இந்தியாவுடன் இணைத்திட ஒப்புதல் அளித்தார். 

அதன்படி ,கணக்கற்ற ஏராளமான  சொத்துக்களுடனும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ரூபாய் 72 லட்சத்துடனும் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம்  வருடம் இந்தியாவுடன் இணைத்தார்.அதன்பிறகு, தனிமாவட்டமாக உருவாகியது.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி  கேட்டுக்கொண்டதற்கிணங்க, சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை  ஆட்சி தலைவர் அலுவலகம் அமைப்பதற்கு தமிழக அரசிடம் ஒப்படைத்தார் தொண்டைமான் மன்னர். தமிழகத்தில், அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்)  மாவட்ட ஆட்சியரகம் அமைந்திருப்பது புதுக்கோட்டையில் மட்டும்தான். 


 'நீயா நானா'கோபிநாத், திரை இயக்குநர் 'பசங்க'பாண்டிராஜ் உள்ளிட்ட திரை ஆளுமைகள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆறே இல்லாத மாவட்டம் இது. ஆனாலும்  ஐந்து காட்டாறுகள் இந்த மாவட்டத்தில் ஓடுகிறது. அந்த ஆறுகள் இந்த மாவட்டத்திலேயே உருவாக, இங்கேயே முடிந்தும் விடுகின்றன.  தமிழர்களின் தனித்துவமான  திருநாளான பொங்கல் பண்டிகை அன்று  பிறந்திருப்பது கூடுதல் சிறப்பு.

மாவட்டத்தைப் பற்றி:
தமிழகத்தின் சுதேச அரசுகளில் ஒன்றாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதி மனிதர்கள் வசிப்பிடமாக திகழ்ந்த இம்மாவட்டத்தின் பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு மாவட்டங்களான திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு, கிழக்கில் வங்காள விரிகுடாவின் கரையோரப் பகுதிகளால் சூழப்பட்ட இம்மாவட்டம், நில மற்றும் கடல் இயற்கை வளங்களை கொண்டுள்ளது. தமிழக வேந்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. ஆவுடையார்கோவில் கோயில், குடுமியான்மலை, பிரகதாம்பாள் ஆகிய கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இசுலாமியர்களின் காட்டுபாவா பள்ளிவாசலும், பழமைவாய்ந்த ஆவூர் கிறிஸ்தவ தேவாலயமும், சமணர்களின் சித்தன்னவாசலும் இம்மாவட்டத்தின் மத நல்லிணக்கத்தை பறை சாற்றுகின்றன. விராலிமலையிலுள்ள மயில்கள் சரணாலயமும் , மலைகளிலும் குகைகளிலும் வடிவமைக்கப்பட்ட கோயில்களும் பிரதான சுற்றுலா தலங்களாகும்.

ஜனவரி 14, 1974 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டமானது உருவாக்கப்பட்டது. தற்சமயம் இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூா் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களையும், குளத்தூர், இலுப்பூா், பொன்னமராவதி, விராலிமலை, ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை, திருமயம், கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய பனிரெண்டு தாலுகாக்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் 763 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 4663 சதுர கி.மீ. ஆகும். 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்குப்படி, . இம்மாவட்டமானது தண்ணீருக்கு பெரும்பாலும் பருவமழையையே நம்பி உள்ளது.

2011 மக்கள் தொகை கணெக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 16,18,345 ஆகும். இதில் ஆண்கள் 8,03,188. பெண்கள் 8.15,157. கிராமபுற மக்கள்தொகை 13,01,991. நகர்புற மக்கள்தொகை 3,16,354 ஆகும்.மொத்தம் படித்தவர்கள் 11,10,545 . இதில் ஆண்கள் 6,08,776 மற்றும் பெண்கள் 5,01,769 ஆகும்.

Post a Comment