குரூப் 2 தேர்வு எழுத இனி கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: புதிய தேர்வுமுறை - முழு விவரம்



தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2, மற்றும் குரூப் 2A தேர்வுத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் படி, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வில் வெற்றிபெற தமிழர் நாகரீகம், தமிழ் மொழி, தமிழர் மரபு, தமிழக சீர்திருத்த இயக்கங்கள், திருக்குறள் உள்ளிட்ட தமிழகம், தமிழர், தமிழ்மொழி சார்ந்த அம்சங்களை அறிந்திருந்தால் மட்டுமே தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் விவரம்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 27.09.2019 அன்று தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது.

இரண்டு தொகுதி தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வும், முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

மிக முக்கியமாக தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள்  வைக்கப்பட்டன.

அதனடிப்படையிலேயே, ஆழ்ந்து விவாதித்து மேற்படி தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.  மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, தற்கால அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன.

மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களது கோரிக்கையினப் பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது:-

முதனிலைத்தேர்வு (Preliminary Examination) 

முதனிலைத்தேர்வுக்கு (Preliminary) ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் -VIII, IX (Units-VIII, IX) க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத்தேர்வுக்கான (Preliminary Examination) மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

இத்தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination)

ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ (Part-A) மட்டும் தனித்தாளாக [(தாள்-1 (Paper-I)], தகுதித்தேர்வாக (Qualifying) மாற்றப்பட்டுள்ளது.

இத்தேர்வு 100 அதிக பட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 1½ மணி நேரம் நடைபெறும். இத்தேர்வில் தகுதிபெற 100 க்கு 25 மதிப்பெண்கள் அவசியம் பெறவேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே தாள்-2 (Paper-2) மதிப்பீடு செய்யப்படும்.

இத்தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை (Rank) நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப்படிப்பிலிருந்து (Degree Standard) பத்தாம் வகுப்பு (SSLC standard) தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பகுதி-அ தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் – 2 (Paper-II), தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

முதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத்தேர்விலும் வெற்றிபெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments