புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் நேற்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மதியம் வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அம்மாபட்டினம் தெற்குதெரு ஓட்டாங்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையிலும், வீடுகளுக்குள்லும் மழைநீர், சாக்கடை நீருடன் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் அம்மாபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முழுவதும் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்கள் வரமுடியாத நிலை இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது:

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளாக பழைய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், திலகர் திடல், பொது அலுவலக வளாகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் புதுக்கோட்டை நகரில் அவ்வப்போது சிறிது சிறிது நேரமாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் அறந்தாங்கி 1.40, மீமிசல் 7.40, மணமேல்குடி 21 மில்லி மீட்டர் மழை பதிவானது.

பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

அன்னவாசல், இலுப்பூர், மேட்டுச்சாலை, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், சித்தன்னவாசல், மெய்வழிச்சாலை, கீழக்குறிச்சி, நார்த்தாமலை, காவேரிமில், மேலூர், குடுமியான்மலை, பரம்பூர், மதியநல்லூர், பெருஞ்சுனை, பணம்பட்டி, சொக்கநாதன்பட்டி மாங்குடி, சத்திரம், செங்கப்பட்டி, வயலோகம், பெருமநாடு, குமரமலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. மழை தொடர்ந்து நீடித்ததால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையால் அன்னவாசல் பகுதிகளில் உள்ள சில அரசு பள்ளிகளுக்கு மதிய இடை வேைளக்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது.

கோட்டைப்பட்டினம்

கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. கோட்டைப்பட்டினம் பகுதியில் கந்தூரி திருவிழா என்பதால் அங்கு ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கனமழை காரணமாக ராட்டினம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. அரசு மேல்நிலை பள்ளி மைதானம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து கொண்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments