திருப்பூர் இந்து மக்கள் கட்சி பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.!



திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 50). இவர் இந்து மக்கள் கட்சி பிரமுகர். சம்பவத்தன்று இவர் வெட்டுக்காயங்களுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


தன்னை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியதாக பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நந்தகோபால், சுய விளம்பரத்துக்காகவும், கட்சியில் பதவி வாங்கவும் தனது டிரைவரைக்கொண்டு கத்தியால் வெட்டிக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மக்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேடும் நோக்கில் செயல்பட்டதாக நந்தகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நந்தகோபால் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் நந்தகோபால் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து அதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள நந்தகோபாலிடம் நேற்று முன்தினம் வழங்கினர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments