அறந்தாங்கியை அருகே வல்லவாரி கிராமத்தில் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்தது - வீணான நெல்மூட்டைகள்




அறந்தாங்கி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் நெல்மூட்டைகள் நனைந்து வீணானது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ளது வல்லவாரி கிராமம். இப்பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் வல்லவாரி கிராமத்தில் உள்ள கடைத்தெருவில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

அறுவடை சமயங்களில் இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து அரசால் நெல்கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து தேர்தலுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது, கோடை வெயில் அதிகம் இருப்பதால், மழைபெய்யாது என நினத்து ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட சில மூட்டைகளை மட்டும் தார்ப்பாயால் மூடி இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை முதல் அறந்தாங்கி பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும்மேலாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் திறந்த வெளியில் இருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. பல நெல்மூட்டைகள் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியது. ஆனால் அதிகாரிகள் அந்த மூட்டைகளை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-
மழை அவ்வப்போது, பெய்து வரும்நிலையில் கொள்முதல் நிலையத்துக்கு அதிகாரிகள் வந்து தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபடவில்லை. இந்த மழை தொடர்ந்தால் இன்னும் 2 நாட்களில் மூட்டைகளில் உள்ள நெல் முளைத்து விட வாய்ப்பு உள்ளது. விவசாயிகளின் உழைப்பால் உருவான நெல்மூட்டைகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வீணாகி வருகிறது.

இதே வல்லவாரி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 47 நாட்களுக்கு முன்பு நாகுடி பகுதி விவசாயிகளால் கொடுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இன்னும் அரசால் கொள்முதல் செய்யப்படாமல் குடோனில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல்மூட்டைகளும் தொடர்ந்து மழைபெய்தால் வீணாக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments