தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!



தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறுகிறது. இதற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

நேற்று முதல் விண்ணப்பிக்க தொடங்கிய நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும். நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் வருகிற 12-ந் தேதி வரை காலை 10 மணி முதல் 5.45 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு அனுமதி கட்டணம் ரூ.1000 ஆகும். 

மேலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப்கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 50-ம், மதிப்பெண் சான்றிதழ்கள் முதலாமாண்டு ரூ.100-ம், 2-ம் ஆண்டு ரூ.100-ம், பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15-ம், ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ம் தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டும். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். 

தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வர்கள் வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments