இந்தியாவில் சர்வதேச விமான சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும்: விமானப் போக்குவரத்துத் துறை






இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவத் தொடங்கிய நேரத்தில், கடந்த மார்ச் 2020 முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடை 2021 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சால் கூறியதாவது:

தற்போது, இந்தியா சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான முயற்சியில் 25க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் விரைவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலைக்கு வர வாய்ப்புள்ளது.

தற்காலிக ஏற்பாட்டின் கீழ், இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச பயணிகள் விமானங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்தந்த கேரியர்களால் தனித்தனியாக இருநாட்டு பிராந்தியங்களுக்குள் இயக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு ராஜீவ் பன்சால் தெரிவித்தார்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நம்பிக்கை

கடந்த வாரம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ''சர்வதேச போக்குவரத்தை இயல்பாக்குவதற்கான செயல்முறையை அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவகிறது, உலகின் சில பகுதிகளில் உள்ள கரோனா வைரஸ் நோய்த்தொற்று சூழ்நிலையை மனதில் கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இந்தியா விரும்புகிறது.

உலகில் விமானப் போக்குவரத்து அரங்கில் நமக்கான ஒரு இடத்தை மீண்டும் பெறுவதற்கும், உலகின் பரந்துவிரிந்த விமானப் போக்குவரத்தில் இந்தியாவில் ஒரு மையத்தை உருவாக்குவதற்கும், நான் செயல்பட்டு வருகிறேன். நிச்சயம் அப்படி இடத்தை உருவாக்குவோம். என்னை நம்புங்கள், நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். நாம் ஒன்றாக அதேநேரம் பாதுகாப்புடன் இணைந்து பணியாற்றுவோம்'' என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments