கோபாலப்பட்டிணத்தில் வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 750 சவரன் நகை கொள்ளை! காவல்துறையினர் விசாரணை!!



மீமிசல் அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 750 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் சென்று விசாரணை நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 55). தொழில் அதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக புருனே நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அவருக்கு மகாதீர் முகமது (20), நஜீர் முகமது (12) ஆகிய 2 மகன்களும், ஜாஹிரா பானு(15) என்ற ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகாதீர் முகமது, கோபாலப்பட்டிணத்தில் உள்ள அவரது அத்தை சாதிக்கா பீவி வீட்டில் வசித்து வருகிறார்.
கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் சம்பவ இடத்திற்கு வந்த போது

கோபாலப்பட்டிணத்தில் உள்ள ஜகுபர் சாதிக்கின் வீட்டை அவரது சகோதரி சாதிக்கா பீவி குடும்பத்தினர் பராமரித்து வந்துள்ளனர். சாதிக்கா பீவி, கடந்த 24-ந் தேதி ஜகுபர் சாதிக் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு, பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் இன்று காலை 10½ மணியளவில் சாதிக்கா பீவியின் மகள் உம்மல் ஹமீலா(35), ஜகுபர் சாதிக்கின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு ஓரம் மிளகாய் பொடி பரவி கிடப்பதை பார்த்தார். உடனே அவர் இதுகுறித்து தனது தாய் சாதிக்கா பீவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறி கிடந்த காட்சி.

அதன்வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் உள் அறைகள் மற்றும் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோ, அலமாரி மற்றும் பெட்டிகளை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றிருந்தது தெரிய வந்தது.
நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் காலியாக கிடந்த காட்சி

இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சாதிக்கா பீவி, புருணையில் உள்ள ஜகுபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தினேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன் (கோட்டைப்பட்டினம்), சாமுவேல் ஞானம் (மணமேல்குடி) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தரையில் மிளகாய்பொடி தூவபட்டுள்ளதை படத்தில் காணலாம்

கைரேகை நிபுணர்கள், மர்ம நபர்களின் கைவிரல் ரேகைகளை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் தீரன் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. ஆனால் கொள்ளை நடந்த வீட்டில் மர்ம நபர்கள் மிளகாய்பொடியை தூவிச் சென்றதால், மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோபாலப்பட்டிணத்தில் தொழில் அதிபர் வீட்டில் 750 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபாலப்பட்டிணத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments