ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அறிவித்தது கேரள அரசு





இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 141 பேரும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 142 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 49 பேரும், கேரளாவில் 57 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கரோனா பரவல், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு எடுத்து, சூழலை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில், அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரள அரசு வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் தற்போது உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

அமெரிக்காவில் அன்றாடம் சராசரியாக லட்சத்துக்கு தொண்ணூராயிரம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகள் போன்ற நாடுகளிலும் ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி இன்று வரை 578 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை டெல்லி, உத்தரப் பிரதேசம், அசாம், ஹரியாணா உள்பட 8க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருந்த நிலையில், இப்போது கேரளமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments