புதுக்கோட்டை மாவட்டத்தில் 47,679 பேர் எழுதுகிறார்கள்:குரூப்-4 தேர்வுக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்கம் அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு




புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 47 ஆயிரத்து 679 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகிறார்கள். இதையொட்டி 150 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

குரூப்-4 தேர்வு

குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 161 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 186 தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில் 47 ஆயிரத்து 679 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். 9 மணிக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

150 சிறப்பு பஸ்கள்

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேர்வர்கள், தேர்வு மைய வளாகத்தில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மாவட்டத்தில் தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பஸ்சின் முன்பகுதியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான சிறப்பு பஸ் என எழுதி ஒட்டப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments