புதுக்கோட்டையில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கல்: தம்பதி உள்பட 3 பேர் கைது




    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள், குட்கா விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் ரகசிய தகவல்களின் அடிப்படையில் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் காமராஜபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மொத்தம் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

3 பேர் கைது

இதையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஜெகன் (வயது 34), அவரது மனைவி பானுமதி (30), ஜெகனின் தந்தை முருகேசன் (54) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் கஞ்சாவை திண்டுக்கல், தேனி பகுதிகளில் இருந்து வாங்கி வந்து புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கஞ்சா விற்கும் கும்பல், கஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments