தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்





தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய மான கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் பட்டியல் அனுப்ப அறிவுறுத்தல்


தமிழகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம்

தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, கடந்த 7-5-2022 அன்று ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த திட்டத்துக்காக நடப்பு ஆண்டே ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி, அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பிவைக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மிகுந்த அக்கறை

இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், 7.5.2022 அன்று தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லக்கூடிய வகையில், ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ உள்ளிட்ட மேலும் 5 புதிய திட்டங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்ததை தங்களுக்கு அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

எம்.எல்.ஏ.வாகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

அந்த வகையில் மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும்பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் எம்.எல்.ஏ.வாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றை செயல்படுத்த இயலாத நிலை இருக்கலாம். மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்ற திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறவேண்டிய அவசியமும் இருக்கலாம்.

முன்னுரிமை அடிப்படையில்...

இதுபோன்ற அத்தியாவசிய திட்டங்களை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம்’ உருவாக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப்பணிகள் குறித்து அந்தந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரைகளை பெற்று மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றை பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ.வாகிய நீங்கள் கருதும் 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.

பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிந்துரைக்கலாம்

எடுத்துக்காட்டாக உங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள், இணைப்பு பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்பு பணிகள்,

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வசதிகள், மின் மயானம், நவீன நூலகம், நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையங்கள், புதிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை பரிந்துரைக்கலாம்.

நம்பிக்கை

எனவே தங்களது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கியமான கோரிக்கைகளை, தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் ஆராய்ந்து, அவற்றை முன்னுரிமைப்படுத்தி, அந்த பரிந்துரை பட்டியலை தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கு அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்ற தொகுதியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்டநாள் தேவைகள் இந்த புதிய முன்னோடி திட்டத்தின்கீழ் உங்கள் மூலமாக நிறைவேறும் என உறுதியாக நம்புகிறேன். இது மட்டுமன்றி, மாவட்டங்களிடையே இருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கும் இந்த திட்டம் மிகுந்த பங்களிக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் நீங்கள் அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments