பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல் தனி நபரின் மொய்விருந்தில் இதுவே அதிகபட்ச வசூல்




பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல் ஆகி உள்ளது.

மொய்விருந்து

தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு, கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பணத்தேவை இருக்கும் சமயத்தில் இந்த பகுதியினர் மொய் விருந்து நடத்துவது வழக்கம்.

மொய் விருந்து நடத்தியவர்கள், வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர்.

பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ.

கொரோனா பரவல் போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது மீண்டும் மொய் விருந்து விழாக்கள் பழைய உற்சாகத்துடன் நடைபெற தொடங்கி இருக்கிறது.

பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் 5 வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து நடத்தினார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அவர் மொய் விருந்து நடத்தினார். பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்துக்கான ஏற்பாட்டை விமரிசையாக செய்திருந்தார்.

கமகமக்கும் உணவு

விழாவில் 100 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு 1300 கிலோ கறியுடன் பெரிய அண்டாவில் மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் சோறு சமைக்கப்பட்டு இருந்தது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மொய் விருந்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

40 கவுண்ட்டர்கள்

மொய் விருந்து சாப்பிட்டவர்கள் மொய் எழுதினார்கள். இதற்காக பணம் என்னும் மெஷினுடன் 40 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

ரூ.11 கோடி வசூல்

விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ.5 லட்சம் வரை தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதி சென்றனர். மாலையில் வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து மொய் விருந்தில் வசூலான பணத்தை எண்ண தொடங்கினர். இதில் ரூ.11 கோடி மொய் வசூல் ஆகி இருந்தது.

தனி நபர் நடத்திய மொய் விருந்தில் வசூலான தொகையில் இதுவே அதிகபட்சம் என்று தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments