ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு ரூ.6 லட்சத்தை இழந்த திருச்சி முதியவர் ஆன்லைன் மோசடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு




ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.6 லட்சத்தை திருச்சியை சேர்ந்த முதியவர் இழந்தார்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார்(வயது 67). இவர் அதே பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 4-ந் தேதி நிர்மல்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.

பிரபல செல்போன் நிறுவனத்தின் (சாம்சங்) பெயரில் வந்த அந்த எஸ்.எம்.எஸ்.சில் “உங்களது செல்போன் எண்ணுக்கு ரூ.3 கோடி மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்துள்ளது. அதை பெற கீழ்கண்ட இ-மெயில் மற்றும் செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளவும்” என்று கூறப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர், உடனடியாக அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

ரூ.6 லட்சம்

அப்போது, எதிர்முனையில் பேசியவர், பரிசுத்தொகை வெளிநாட்டு பணம் என்பதால் அதை இந்தியாவுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி, உலக வங்கி ஆகியவற்றிடம் அனுமதி வாங்க வேண்டும். அத்துடன் ஜி.எஸ்.டி. பதிவு செலவு ஆகியவை உள்ளது என்று தெரிவித்து, 3 வங்கி கணக்குகளை கூறி, அதற்கு ரூ.6 லட்சம் அனுப்பும்படி கூறியுள்ளார். இதை நம்பிய நிர்மல்குமார், அந்த வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சத்தை அனுப்பினார். இந்த நிலையில் அவருக்கு ஒரு தபால் வந்தது. அதில் பேங்க் ஆப் இங்கிலாந்து என்ற பெயரில் ஒரு ஏ.டி.எம். கார்டு இருந்தது. தபால் அவருடைய கைக்கு கிடைத்ததை அறிந்து கொண்ட அந்த கும்பல், நிர்மல்குமாரை தொடர்பு கொண்டு, தற்போது உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் பரிசுத்தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பரிசுத்தொகை பெரிய தொகை என்பதால் அதை விடுவிக்க மேலும் ரூ.7 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

நண்பர் அறிவுரை

நிர்மல்குமாரிடம் பணம் இல்லாததால், நடந்த விவரங்களை கூறி நண்பர் ஒருவரிடம் ரூ.7 லட்சம் கடன் கேட்டுள்ளார். அவர், நிர்மல்குமார் மோசடி கும்பலிடம் சிக்கி இருப்பதை உணர்ந்து, அவருக்கு ஆலோசனைகளை கூறி மேற்கொண்டு பணத்தை செலுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். மேலும் இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய கூறினார்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நிர்மல்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல் தான் நிர்மல்குமாரை ஏமாற்றி ரூ.6 லட்சத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments