திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்




திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே உள்ள சித்தலஞ்சாம்பட்டி பெரிய அய்யனார் கோவிலில் 41-ம் ஆண்டு சந்தன உற்சவ விழாவையொட்டி நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இருபிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில், 15 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இதில் முதல் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ.அம்பாள், 2-ம் பரிசு ஏரியூர் பெத்தாச்சி அம்பாள், 3-ம் பரிசு கே.கே.பட்டி பொன்னையா, 4-ம் பரிசு மதகுபட்டி கணேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

பரிசுகள்

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 48 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இருபிரிவாக நடத்தப்பட்டு பரிசு அறிவிக்கப்பட்டது. இதில், முதல் பரிசு நகரம்பட்டி வைத்தியம், பில்லமங்கலம் வாசுதேவன், 2-ம் பரிசு பெரிய கோட்டை ராதிகா, விராமதி செல்வமணி, 3-ம் பரிசு பெருங்குடி வேண்டி வந்த அம்மன், காரைக்குடி கருப்பண்ணன், 4-ம் பரிசு காரைக்குடி சிவா, கே.புதுப்பட்டி கலை ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற திருமயம்- ராயவரம் சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments