மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்




மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கட்டுமாவடி மீன் மார்க்கெட்

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் மற்றும் இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன.

கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலமாக மீன்களும் விற்பனைக்கு வருகின்றன.

மாட்டுப்பொங்கல்

இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன்களின் வரத்து அதிகமாக இருக்கும். தற்போது கட்டுமாவடி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் அரிய வகை மீன்களும், சிறியது முதல் பெரிய மீன்கள் வரை விற்பனைக்கு வருகிறது.

மாட்டுப்பொங்கல் அன்று ஆடு, மாடு வளர்க்காதவர்கள் அசைவ உணவை விரும்புகின்றனர். மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்கள் அதற்கு அடுத்த நாள் அசைவ உணவு சாப்பிடுவார்கள். இதனால் மாட்டுப்பொங்கல் தினமான நேற்று கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன் வாங்குவதற்காகவே பொதுமக்கள் வந்திருந்தனர்.

மீன்களை வாங்கி சென்றனர்

மேலும் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெரு நகரங்களில் தொழில் செய்யக்கூடியவர்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வருகை தந்துள்ளனர். இவர்கள் ஆடு, கோழி போன்ற இறைச்சி உணவுகளை எப்போது வேண்டுமானாலும் விரும்பி சாப்பிடலாம். ஆனால் உயிர்மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மட்டுமே கிடைக்கிறது.

இதனால் உள்ளூர், வெளியூர் மக்கள் என அதிகமான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே மீன் மார்க்கெட்டிற்கு மீன்களை வாங்க வந்திருந்தனர். மீன்கள் வாங்குவதற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களது இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தியதால் அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கூடிய மக்கள் கூட்டம் 10 மணி வரை இருந்தது. மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. சிறிய வகை மீன்கள் முதல் பெரிய வகை மீன்களும் விற்பனைக்கு வந்திருந்ததால் பொதுமக்கள் விரும்பிய மீன்களை வாங்கி சென்றனர். இதேபோன்று கோழி மற்றும் ஆடு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments