புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி ஏப்ரல் 1-ந் தேதி முதல் வினியோகம்




ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி ஏப்ரல் 1-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி

மத்திய அரசு, பொது வினியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 உள்ளடக்கிய நுண்ணூட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, ஏற்கனவே குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள ஊட்டச்சத்தின் பயன்கள் விவரம், இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்கிறது.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கல்

போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும் ரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று முதல் அறிமுக திட்டமாக செயல்படுத்தும் பொருட்டு திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் அறிமுகம் செய்து பொதுவினியோகத்திட்டத்தின் மூலம் ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி, இந்திய உணவு கழகத்திலிருந்து பெறப்பட்டு ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை உள்ளடக்கிய நோட்டீஸ்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாட்டினை களைந்து ரத்த சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments