சாலை இல்லை... பள்ளிச் சிறார்கள் தவிப்பு! மெய்யனூர் கிராமத்தின் அவல நிலை!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, துஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யனூர் கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முறையான சாலை வசதி இல்லாததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்குக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சாலைப் பிரச்சனையைத் தீர்க்க துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு
ஒக்கூர், சித்தக்கூர், பொதுவக்கூர் ஆகிய கிராமங்களைத் தாண்டி அமைந்துள்ள மெய்யனூர் கிராமத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இதனைச் சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின் பிரதான பயணத் தேவைகளுக்கு ஆவுடையார்கோவில் முதல் கண்ணங்குடி - தேவகோட்டை சாலையை இணைக்கும் மெய்யனூர் கிராமச் சாலையையே நம்பியுள்ளனர்.

பள்ளி மாணவர்கள், நோயாளிகள் கடும் அவதி
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலை முற்றிலும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்தும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் இக்கிராமத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட கிராமத்திற்குள் வர முடியாத அவல நிலை நீடித்து வருகிறது. கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

துரித நடவடிக்கை தேவை
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டுப் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. எங்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதியை அமைத்துத் தர, மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பணிவுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments