சென்னை-கோவை ‘வந்தே பாரத் ரெயில்’ பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்




சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

‘வந்தே பாரத்’

சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை, தமிழகத்திற்கு உள்ளே தொடங்கப்படும் முதல் சேவையாகும். ஏற்கனவே வந்தே பாரத் ரெயில் சென்னை - மைசூரு இடையே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

வந்தே பாரத் ரெயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரெயிலாகும். முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த ரெயில்கள் இந்தியாவில் 12 உள்ளன. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 2 ரெயில்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளன.

வந்தே பாரத் ரெயில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பை கொண்டது. சதாப்தி ரெயிலைவிட வேகமான ரெயில் வந்தே பாரத்.

இந்த ரெயிலில் சென்னை - கோவை இடையேயான அதன் பயணநேரம் 5.50 நிமிடம் ஆகும்.

சிவப்பு கம்பள

வரவேற்பு

சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழா நேற்று சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சி சென்டிரல் ரெயில் நிலையத்தின் 10-வது நடைமேடையில் நடைபெற்றது. ‘மேட் இன் இந்தியா' என்று எழுதப்பட்டு, வெள்ளை நிறத்தில், புல்லட் ரெயில் சாயலில், அலங்காரத்துடன் ‘வந்தே பாரத்’ ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

விழாவுக்காக அங்கு பிரதமரை வரவேற்கும் விதமாக நடைமேடையில் தனி மேடை அமைக்கப்பட்டு இருந்தது. சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது.

மூவர்ணத்தில் துணி மற்றும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.

அங்கு ரெயில்வே அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அமருவதற்கு இட வசதி செய்யப்பட்டு இருந்தது.

எதிரே உள்ள நடைமேடையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவோருக்கென்று தனித்தனியாக இடங்கள் பிரித்து அளிக்கப்பட்டு இருந்தன. தீவிர கண்காணிப்புக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவை காண்பதற்காக வந்திருந்தனர்.

ரெயிலை பார்வையிட்டார்

விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை 3.30 மணியளவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வந்தார். பிரதமர் நரேந்திர மோடி மாலை 4.08 மணிக்கு வந்தார். அவருக்கு ஒலிபெருக்கி மூலம் தெற்கு ரெயில்வே சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோரும் வந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயிலுக்குள் சென்று, அங்கே இருந்த மாணவர்கள், ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர் விழா மேடைக்கு மாலை 4.17 மணிக்கு வந்தார். அவரை அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷமிட்டு வரவேற்றனர். அவர் அனைவரையும் பார்த்து கையசைத்தார்.

பிரதமர் கொடியசைத்தார்

மாலை 4.19 மணிக்கு பச்சைக் கொடியை பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்தார். உடனே கொடியை காட்டி வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஒலி எழுப்பியபடி, வேகத்துடன் தன் ஓட்டத்தை வந்தே பாரத் ரெயில் தொடங்கியது. அதன் பின்னர் பார்வையாளர்களை நோக்கி இரண்டு கைகளையும் அசைத்தபடி அங்கிருந்து பிரதமர் விடை பெற்று சென்றார்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments