மணமேல்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து: கொத்தனார் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே மரணம்




மணமேல்குடி அருகே அரசு பஸ் மோதி கொத்தனார் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கொத்தனார். இவர் நேற்று மணமேல்குடி வடக்கூர் பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு டீ வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் மணமேல்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார்.

வடக்கூர் அம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் வந்தபோது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் மோதிய அரசு பஸ் சாலையோரமாக பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த பட்டுக்கோட்டையை அடுத்துள்ள மதுக்கூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான செண்பகவள்ளி (60) என்பவர் மீது மோதியது.

இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அப்பகுதியில் இருந்த கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் ேமாதி பஸ் நின்றது. இதில் 4 வாகனங்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் செல்வக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையின் மேற்கு புறம் வடக்கூர் அம்மன் கோவில், அதன் அருகில் திருமண மண்டபமும் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு செல்லும் முகப்பில் நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நுழைவு வாயில் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. முகூர்த்த நாட்களில் தினசரி 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணத்திற்காக நுழைவு வாயில் அருகே இருபுறமும் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவில் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் இருபுறமும் விளம்பர பதாகைகள் மறைப்பதால் வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வடக்கூர் அம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே விளம்பர பதாகைகளை வைப்பதை தடுக்க வேண்டும். மேலும் விபத்து ஏற்படாத வண்ணம் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments