கடற்படைக்கு தேர்வான தஞ்சை மீனவ இளைஞர்: டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து...




தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமம் நடத்திய இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்று, பின்னர் இந்திய கடற்படைக்குத் தேர்வான தஞ்சை மீனவ இளைஞருக்கு டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து தெரிவித்தார்.
மீனவவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவரகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேருவதற்காக மீனவ இளைஞர்களுக்கு தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பில் 6 மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் கடலோர மாவட்டங்களில் இருந்து 240 மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு உணவு, உறைவிட வசதியுடன், மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

120 இளைஞர்களுக்கு பயிற்சி: 
முதல்கட்டமாக 120 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தஞ்சை மீனவ இளைஞர் முத்துப்பாண்டி, இந்திய கடற்படைக்குத் தேர்வு செய்யப்பட்டு, ஒடிசா மாநிலத்தில் உள்ள கடற்படை மையத்தில் பயிற்சி முடித்து, தற்போது பணியில் சேர்ந்துள்ளார்.

இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்: 
இந்நிலையில் முத்துப்பாண்டி நேற்று டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து டிஜிபி கூறும்போது, “மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இந்தியக் கடற்படையில் வீரராகச் சேர்ந்திருப்பது மற்ற மீனவ இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மீனவஇளைஞர்கள் 044-28447752 என்றஎண்ணிலும், csgtnp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments