ஏற்காடு நீர்வீழ்ச்சியில் 30 அடி பாறையில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவி சாவு காப்பாற்ற முயன்ற தந்தையும் பலியான பரிதாபம்




    
சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இவர்களில் சவுமியா தற்போது 8-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். கோடை விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினருடன் பாலமுரளி ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தார். ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தார். நேற்று மதியம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார்.

அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். பின்னர் சவுமியா அங்குள்ள பாறையில் ஏறி விளையாடினாள். அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகில் 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சவுமியா ஏறினாள். மகள் ஏறுவதை பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று கூறிக்கொண்டே பின்னால் அவரும் பாறையில் ஏறினார்.

பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாள். மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, அவளை காப்பாற்ற சென்றார். அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார்.

தந்தையும், மகளும் பாறையில் இருந்து கீழே விழுந்து உருண்டபடி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் பகுதிக்கு வந்தனர். நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அலறியபடி தந்தையும், மகளையும் காப்பாற்ற ஓடோடி வந்தனர். நீர்வீழ்ச்சியில் விழுந்து கிடந்த 2 பேரையும் மீட்டனர். அவர்கள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. கணவர், மகளின் உடலை கண்டு சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments