காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் துரிதமாக நடைபெறுகிறது கலெக்டர் கவிதா ராமு தகவல்



காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் துரிதமாக நடைபெறுவதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.


காவிரி-வைகை-குண்டாறு திட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடர்பான, மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக்கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்காக விராலிமலை, குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 448.81 எக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 143.32 எக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட திட்டத்திற்காக 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 14 கிராமங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நிலம் கையகப் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டத்தின் படியும் மற்றும் தனி நபர் பேச்சுவார்த்தை மூலமும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

76 எக்டேர் கையகப்படுத்துதல்

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் 10 வருவாய் கிராமங்களில் 10 கட்டங்களாக 76.16 எக்டேர் நிலங்கள் ரூ.59.59 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலமெடுப்பு பணிகளுக்காக இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு ஏதுவாக 3 பட்டா மாறுதல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கலிமங்கலம், புதுக்கோட்டை தாலுகா நத்தம்பண்ணை, செம்பாட்டூர் மற்றும் கவிநாடு மேற்கு ஆகிய கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்படவுள்ள குடும்பங்கள் ஆகியவற்றுக்கான மறுவாழ்விற்காக, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட நிர்வாகி, இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.வால் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. மேலும் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பணிகள் துரிதம்

அதனடிப்படையில் இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.வால் சமர்ப்பிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையினை பரிசீலனை செய்து மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர், நில நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பும் பொருட்டு மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடத்தப்பட்டது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments