தலைமன்னார் - ராமேசுவரம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து: துறைமுகத்தை புனரமைக்க இலங்கை அரசு முடிவு




தலைமன்னார் - ராமேசுவரம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவது குறித்து இரு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. கடந்த மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய வருகையின் போது காங்கேசன் துறை - நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து இலங்கை தலைமன்னாரில் உள்ள துறைமுகத்தைப் புனரமைத்து ராமேசுவரத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அந்நாட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்தது. இந்தியா - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர் காலத்தில் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் 24.02.1914-ல் தொடங்கப்பட்டது.


22.12.1964-ல் தனுஷ்கோடி புயலால் அழிந்த பிறகு 1965-ம் ஆண்டு முதல் ராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கியது. இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை போராக மாறியதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக 1981-ம் ஆண்டு கப்பல் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. மேலும், போரின்போது தாக்குதல்களால் தலைமன்னார் துறைமுகம் சேதமடைந்தது.


இந்நிலையில், தலைமன்னார் துறைமுகத்தைப் புனரமைத்து ராமேசுவரத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்கு வரத்தைத் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. திட்டப் பணிகளுக்காக அந்நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமன்னார் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தலைமன்னார் துறைமுகத்தைப் புனரமைத்து உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அதன் எல்லையைச் சுற்றியுள்ள சுமார் 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகளுக்காக இலங்கை ரூபாய் மதிப்பில் 180 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு, ராமேசுவரம்-தலைமன்னார் இடையே (50 கி.மீ.) கப்பல் போக்குவரத்துக்கான மாநில கடல்சார் வாரியம் தயாரித்த திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது. தலைமன்னார் துறைமுகம் புனரமைக்கப்பட்ட பின்னர் ராமேசுவரத்திலிருந்து கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments