கொச்சியில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வரும் பயணிகள் கப்பல் இலங்கைக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல்




கொச்சியில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வரும் பயணிகள் கப்பல், இலங்கைக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் கப்பல்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது.

குடியுரிமை அலுவலகம், பாஸ்போர்ட் பரிசோதனை அலுவலகம், மருத்துவ பரிசோதனை அலுவலகம், பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்வதற்கான ஸ்கேன் எந்திரம் கொண்ட அறை, பயணிகள் அறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

90 சதவீத பணிகள் முடிந்தது

மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணங்கள் பூசும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து துறைமுக அதிகாரிகள் கூறுகையில், நாகை துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டது. மேலும் பயணிகள் கட்டணம் நிர்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிர்வாகத்துடன் மத்திய, மாநில அரசுத்துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

சோதனை ஓட்டம்

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்காக கொச்சியில் இருந்து ஒரு கப்பல் நேற்று முன்தினம் புறப்பட்டு உள்ளது. இந்த கப்பல் இலங்கை வழியாக நாளை(சனிக்கிழமை) மாலை அல்லது 8-ந் தேதி(ஞாயிறு) காலை நாகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பிறகு அரசுத்துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ஓரிரு வாரத்தில் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கப்பல் போக்குவரத்து தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments