புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணி: ஜனவரி வரை பாம்பன் பாலத்தை படகு, கப்பல்கள் கடக்க தடை




புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணி தொடங்க உள்ளதால் வருகிற ஜனவரி மாதம் வரை பாம்பன் பாலத்தை, மீன்பிடி படகுகள், கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாம்பன் ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்த பாலம் அமைத்து 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால், அந்த பாலத்தின் அருகிலேயே ரூ.535 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த புதிய ரெயில் பால பணிகளுக்காக கடலின் மையப்பகுதியில் உள்ள தூண்களையும் சேர்த்து மொத்தம் 101 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது இரும்பு கர்டர்கள் மற்றும் தண்டவாளங்கள் பொருத்தும் பணிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

அதுபோல் புதிய ரெயில் பாலத்தின் முக்கிய பணியாக உள்ள தூக்குப் பாலத்தை பொருத்துவதற்காக தூக்கு பாலத்தின் பாகங்கள் அனைத்தும் பாம்பன் கொண்டுவரப்பட்டு ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் வைத்து வெல்டிங் செய்து பொருத்தும் பணியானது கடந்த 3 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றன.

படகு, கப்பல்கள் செல்ல தடை

இந்த நிலையில் தயாரான தூக்குப்பாலத்தை பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து தூண்கள் வழியாகவே கிரேன் மூலம் நகர்த்தி மையப்பகுதிக்கு கொண்டு வந்து பொருத்தும் பணியானது இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது.

இதற்காக தூக்குப்பாலம் அமைவிடத்தில், அதன்எடையை தாங்கி நிற்கும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக தற்போது கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் பாலத்தை கடந்து செல்லும் பாதையில் கடலுக்குள் அதிக உயரம் மற்றும் எடை கொண்ட இரும்பு கம்பிகள் நிலைநிறுத்தப்பட உள்ளன.

எனவே வருகிற 15-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் வரையிலும் 3 மாதத்திற்கு பாம்பன் பழைய தூக்குப்பாலம் வழியாக மீன்பிடி படகுகள், கப்பல்கள் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments