பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு ‘வாட்ஸ்-அப்' செயலி வாயிலாக புதிய தளம் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு




பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்காக வாட்ஸ்-அப் செயலி வாயிலாக புதிய தளத்தை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

‘எமிஸ்’ இணையதளம்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றை வழங்குவதில் பள்ளிக்கல்வித்துறை முழு வீச்சில் ஈடுபட்டு அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளம் வாயிலாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி, அரசின் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த எமிஸ் தளத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் எண் சுமார் 1 கோடியே 16 லட்சம் செல்போன் எண்களில் தற்போது உபயோகத்தில் உள்ள எண் எவை? என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதனால் பல சிரமங்களை சந்தித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் பரிமாற்றத்துக்காக...

இதனை சரிசெய்யும் விதமாக தற்போது செல்போன் எண் சரிபார்க்கும் பணிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 5 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றதும், பள்ளிக்கல்வித்துறைக்கும், பெற்றோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது. வாட்ஸ்-அப் செயலி வாயிலாக இந்த தளத்தை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது.

இந்த புதிய தளத்தில், ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு தேவையான அனைத்து தகவல்களும் இந்த தளத்தின் வாயிலாக கொண்டு சேர்க்க முடியும். பள்ளி, வட்டம், மாவட்டம், மாநில, இயக்குனரகம் அளவில் இந்த தளத்தை இயக்க முடியும்.

புதிய தளம்

அந்த வகையில் இந்த தளத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக எமிஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள சுமார் 1 கோடியே 16 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை துரிதப்படுத்தி வருகிறது. வருகிற 25-ந் தேதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.

பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை இணைக்கும் ஒரு கருவியாக பள்ளிக்கல்வித்துறையின் இந்த புதிய தளம் செயல்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயல்பாட்டுக்கு கொண்டுவருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments