கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு




கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவு

2023-24-ம் கல்வியாண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன. இதனைத்தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் (2024-25) அடியெடுத்து வைக்க மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் காத்து இருக்கிறார்கள்.

வழக்கமாக கோடை விடுமுறை ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கும். ஜூன் முதல் வாரத்தில் அதாவது, 1 முதல் 5-ந்தேதிகளுக்குள் பள்ளிகள் திறப்பும் இருக்கும்.

நடப்பு கல்வியாண்டில், நாடாளுமன்ற தேர்தல் முடிவு ஜூன் 4-ந்தேதி வெளியாக உள்ளதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

வெயிலின் தாக்கம்

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அதனை கருத்தில் கொண்டும் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும்.

ஆனால் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்த காரணத்தினால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து போய் இருக்கிறது. கடந்த 2 வாரங்களாக வெப்ப அளவு குறைவாகவே பதிவாகி வருகிறது.

மேலும் வரக்கூடிய நாட்களிலும் வெப்பம் குறைந்தே காணப்படும் என்று கருதி, கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? என்ற அறிவிப்பை இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை முன்கூட்டியே வெளியிட்டு இருக்கிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது?

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும். எனவே குறிப்பிட்ட நாளில், பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயரக்கூடும்

இதற்கிடையில் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று அறிவித்து இருக்கிறது. அப்படி இருக்கும் நேரத்தில் வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்கும். அந்த சூழலில் பள்ளிகள் திறப்பு பற்றி எந்த மாதிரியான முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுக்கும்? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments