கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு அமைச்சர் பெரியகருப்பன் தகவல்




கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கல்விக்கடன்

இளைஞர் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி மிகவும் அவசியம் என்ற வகையில், கல்லூரிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என கருதி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்ற பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக இந்த கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே ரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த இந்த கல்விக்கடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ரூ.5 லட்சமாக உயர்வு

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, முதுகலை பட்டப்படிப்புக்கும், தொழில்முறை படிப்புகளுக்கும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி 2-ம், 3-ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த இந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கல்விக்கடனை பெறும் மாணவர்கள் கல்வி படிக்கும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இந்த கல்விக்கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10 சதவீதம் ஆகும்.

கல்வி கனவு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த கல்விக்கடன் வழங்கப்படுகின்றன.

எனவே தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கல்விக்கடனை பெற்று கல்வி கனவை நனவாக்கி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments