இதுவரையான நடவடிக்கை போதாது: போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு




போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஆற்றிய உரை வருமாறு:-

அரசு கொண்டு வரும் திட்டங்களைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய்ச்சேர்த்ததில் பெரும் பங்கு வகித்த அரசு அலுவலர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் நன்றி.

அடுத்து வரப்போகும் நாட்களிலும் இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப்பெண் திட்டம்போல, மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டம்தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள். எனவே அவற்றில் தனிக்கவனம் தேவை.

புதிய தொழிற்சாலைகள்

அடுத்த 2 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள். புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு; சிறந்த சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்; பொதுமக்களுக்கு தங்குதடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய 4 குறிக்கோள்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். அதன்படி நல்லாட்சியை நாம் வழங்கி வருகிறோம்.

ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன. இது நமது அரசு என்று மக்களை நினைக்க வைத்துள்ளோம். இவை அனைத்தும் தொய்வில்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அதற்கு அடிப்படையாக நீங்கள் முழுக்கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களை நான் எடுத்து சொல்ல வேண்டும்.

கல்லூரி கனவு

மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டத்தை வரும் ஜூலை 15-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை ஊரகப்பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உங்களைத் தேடி உங்கள் ஊரில் மற்றும் நீங்கள் நலமா? போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலும், இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திலும் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். கல்லூரி கனவு, உயர்வுக்குப்படி போன்ற திட்டங்களை ஆர்வத்துடனும், முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும். விரைவில் தொடங்கப்பட இருக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டமும் மிகவும் முக்கியமான திட்டமாகும். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

போதை ஒழிப்பு

இன்னொரு மிக முக்கியமான ஒரு கடமையும் உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அது போதாது. போதைப்பொருள் நடமாட்டம் என்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்கு பிரச்சினையுமாகும். எனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம்.

கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் நகராட்சித்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப்பொருட்கள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் மற்றும் தீவிரக் கவனம் செலுத்தியாக வேண்டும். போதைப்பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சென்னை (பொறுப்பு கலெக்டர்), செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments