திருச்சி அருகே ஓடும் ரெயிலில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு பயணிகள் அலறியடித்து ஓட்டம்




திருச்சி அருகே ஓடும் ரெயிலில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ரெயில் என்ஜினில் புகை

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்காலுக்கு டெமு பயணிகள் ரெயில் (வண்டி எண் 06880) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று காலை 8.35 மணிக்கு திருச்சியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அந்த ரெயில் காரைக்காலை நோக்கி புறப்பட்டு சென்றது.

திருச்சி ஜங்ஷனை அடுத்த பொன்மலை, மஞ்சத்திடல் ரெயில் நிலையங்களை தொடர்ந்து திருவெறும்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 9 மணிக்கு வந்தது.

2வது நடைமேடைக்கான தண்டவாளத்தில் நுழைந்தபோது ரெயிலின் பின்பக்கம் உள்ள என்ஜினில் திடீரென குபுகுபுவென புகை வெளியேறியது.

அலறியடித்து ஓட்டம்

இதனை கவனித்த ரெயில்வே கார்டு, ரெயிலை நிறுத்துமாறு என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயிலில் உள்ள பயணிகளை கீழே இறங்குமாறு ரெயில்வே ஊழியர்களும், ரெயில் நிலையத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலமும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்து கொண்டு 2வது நடைமேடையில் இறங்கி ஓடினர்.

இதையடுத்து திருவெறும்பூர் ரெயில் நிலைய அலுவலர் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பான்கள் மூலம் புகையை கட்டுப்படுத்தினர். அவர்களின் உடனடி நடவடிக்கையால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

அப்போது என்ஜினில் இருந்து ஆயில் சூடான நிலையில் வெளியே தள்ளப்பட்டதால் அதிகளவில் புகை வெளியேறியது, தெரியவந்தது. இதனை தொடர்ந்து என்ஜினில் இருந்து ஆயில் முழுவதும் வெளியேற்றப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்ஜினில் இருந்து புகை வெளியேறியது நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் என்ஜினை பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு கொண்டு சென்று புகை வந்ததற்கான காரணம் குறித்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் ரெயில்வே மூத்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் புகை வெளியேறிய ரெயில் என்ஜினை பார்வையிட்டனர். மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தனர்.

சிறப்பு ரெயிலில்...

இதையடுத்து திருச்சி  காரைக்கால் ரெயிலில் வந்த பயணிகளை அடுத்து வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரெயிலில் ஏற்றி அனுப்பினர். அந்த ரெயில் பயணிகளின் வசதிக்கேற்ப அனைத்து ரெயில் வழித்தடங்களிலும் நின்று சென்றது.

ஓடும் ரெயிலில் என்ஜினில் புகை வெளியேறிய சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments