வெளிநாடு பயணிகளை கையாளுவதில் திருச்சி விமான நிலையத்திற்கு 3-வது இடம்




வெளிநாடு பயணிகளை கையாளுவதில் திருச்சி விமான நிலையத்திற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

பயணிகளை கையாளுவதில் வளர்ச்சி

திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் ரூ.112 கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 2-வது முனையத்தை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட 2-வது முனையம் ஜூன் மாதம் 11-ந் தேதி முதல் செயல்பட்டு வந்தது.

இந்திய அளவில் திருச்சி விமான நிலையம், பயணிகளை கையாளுவதில் சிங்கப்பூருக்கான சேவையில் 4-வது இடத்தையும், மலேசியாவுக்கான சேவையில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. கிழக்காசிய நாடுகளுக்கான போக்குவரத்தில் 5-வது இடத்தை திருச்சி தக்க வைத்துள்ளது. பிற நாடுகளுக்கான பயணிகளை கையாளுவதிலும் திருச்சி வளர்ச்சியடைந்துள்ளது.

3-வது இடம்

கடந்த நிதியாண்டில் வெளிநாடு பயணிகளை கையாளுவதில் 4.91 புள்ளிகள் பெற்று திருச்சி 3-வது இடத்தை பிடித்துள்ளதாக ஏர்போர்ட் கவுன்சில் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு விமான சேவை அளிக்க இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வந்தன. வருகிற 30-ந் தேதி முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்துக்கு ஒரு விமான சேவையை கூடுதலாக வழங்க உள்ளது.

மலேசியா செல்லும் பயணிகள் விமானத்தில் இருக்கைகள் 85 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. முக்கிய பண்டிகை, விழா நாட்களில் முழு இருக்கையும் நிரம்பி விடும். இதனால் மலேசியாவிற்கு மேலும் விமான சேவையை அதிகரிக்க தமிழக மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கூடுதல் சேவைகள்

இந்நிலையில் மலேசியாவுக்கு சேவை அளித்து வரும் மலிண்டோ ஏர் லைன்ஸ் நிறுவனம் தினசரி ஒரு சேவை என்ற முறையில் வாரத்துக்கு 7 கூடுதல் விமான சேவையையும், ஏர் ஏசியா வாரத்துக்கு 3 நாட்களுக்கு கூடுதலாக விமான சேவையும் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு வாரந்தோறும் இயக்கப்படும் விமான சேவையானது, 24 சேவையாக உயருகிறது.

இந்திய அளவில் மலேசிய பயணிகளை கையாளுவதில் திருச்சி முதலிடத்துக்கும், கிழக்காசிய நாடுகளுக்கான சேவையில் மேலும் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சிங்கப்பூருக்கான விமான சேவையை அதிகரிக்கும்போது, பயணிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடும். இதனால் திருச்சி விமான நிலையம் வளர்ச்சியை பெறும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments